மும்பை: முதலீட்டாளர்களை கருத்தில் கொண்டு பங்குச்சந்தையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வருவதாக செபி(இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம்) தலைவர் சி.பி.பாவே கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறும் போது, பொதுப் பங்கு வெளியீடுகளை பரிசீலனை செய்யும் காலத்தை ஒரு வாரமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்டினால், பங்கு வெளியீட்டு இறுதி தேதியிலிருந்து 20 நாட்களுக்குப் பிறகே அவை பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகின்றன. மாறாக பங்குகளை பரிசீலனை செய்யும் காலத்தை ஒரு வாரமாகக் குறைக்க செபி நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் ஓராண்டில் இந்த இலக்கு எட்டப்படும் என்று பாவே தெரிவித்தார். மேலும், தகுதியுள்ள நிறுவனங்களுக்கு ஏல முறையில் பங்குகளை விற்பனை செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நிறுவனங்கள் குறைந்தபட்ச விலையை நிர்ணயித்து, முதலீட்டு நிறுவனங்கள் அதிகபட்ச விலையை ஏலம் மூலம் தீர்மானிக்க வகை செய்யப்பட்டுள்ளது. பரஸ்பர நிதித் திட்ட முதலீட்டில் உள்ள செலவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் பாவே தெரிவித்தார்.
Leave a Reply