புதுடில்லி : இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் வளர்த்த பெருமைக்கு சொந்தக்காரர். ரத யாத்திரை மூலம் இந்திய மக்களை சந்தித்து தனது இமேஜூம், பா.ஜ.,வை ஆட்சியில் அமர்த்த காரணமாக இருந்தவருமான அத்வானி, பிரதமர் பதவியில் அமருவார் என்ற எதிர்பார்ப்பு முடியாமல் போனது என்பது பெருவாரியான மக்களின் ஏகோபித்த எண்ணமாக எழுகிறது.
லால் கிருஷ்ணா அத்வானி என்ற முழுப்பெயரை கொண்ட அவர் சுருக்கமாக எல்.கே.அத்வானி என்றழைக்கப்பட்டார். பா.ஜ.,வை பொறுத்த மட்டில் அத்வானி என்றும் மக்கள் மனதில் மறையாத அளவிற்கு பதிந்து விட்டார் என்றால் மிகையல்ல. இன்றோ அல்லது இன்னும் சில நாட்களில் அவர் எதிர்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகி கொள்கிறார்.
சட்டப்படிப்பு முடித்தவர்: எல். கே., அத்வானி கடந்த 1927 ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ம் தேதி கராச்சியில் பிறந்தார். செயிண்ட் பேட்டரிக் உயர்நிலைப்பள்ளியில் படித்து ஐதராபாத்தில் உள்ள டி . ஜி., நேஷனல் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து, மும்பையில் வக்கீலாக சட்டப்படிப்பு முடித்தார். 1942 ல் ஆர்.எஸ். எஸ்., சில் தன்னை இணைத்து கொண்டார். 1950 ல் பாரதிய ஜனசங்கத்தில் சேர்ந்தார். 1975 ல் இந்திராகாந்தி காலத்தில் போடப்பட்ட எமர்ஜென்சியை எதிர்த்து ஜனதா கட்சி சார்பில் பெரும் கூட்டணியாக எதிர்கட்சிகள் இணைந்தன. இந்தக்காலத்தில் 1977 ல் நடந்த பொதுத்தேர்தலில் மொரார்ஜி தேசாய் பிரதமரானார். அவரது அமைச்சரவையில் அத்வானி தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
மக்களை கவர்ந்த ரத யாத்திரை : தொடர்ந்து 1986 ல் பாரதிய ஜனதாவுக்கு தலைவரானார். இவர் பா. ஜ., தலைவராக பொறுப்பேற்றது முதல் இந்தியாவில் பா. ஜ., அசுர வளர்ச்சி அடைந்தது.1989 ல் அயோத்தி விவகாரத்தை கையிலெடுத்தார். ராமர் பிறந்த புண்ணிய பூமி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தியா முழுவதும் ரதயாத்திரையை துவக்கினார். 1992 ல் ரதயாத்திரையை முடித்தார். பல மாநிலங்களில் பா.ஜ., செல்வாக்கு பெற்றது. அத்வானி காலத்தில் பா.ஜ., பல மாநிலங்களில் மக்கள் செல்வாக்கை பெற்றது. பார்லிமென்டில் விவாதித்து வாதம் செய்வதில் கெட்டிக்காரர் , பேச்சு திறமையில் வல்லவர் என்ற பெயரெடுத்தவர்.
1996 ல் நடந்த பொதுத்தேர்தலில் பா.ஜ., அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி பீடத்தில் அமர்ந்தது. இருப்பினும் அந்த ஆட்சி 13 நாளில் கலைந்து பின்னர் பலக்கட்சிக்கூட்டணியுடன் தேசிய ஜனநாயாக கூட்டணி அமைத்து 1998 ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது. இது ஜெயலலிதாவின் மனக்கசப்பால் ஆட்சி இழக்க நேரிட்டது. தொடர்ந்து 1999 ல் ஆட்சிக்கட்டிலில் பா.ஜ., வாஜ்பாய் தலைமையில் அமர்ந்தது. இந்தக்காலத்தில் அத்வானி உள்துறை அமைச்சராகவும் பின்னர் துணை பிரதமராகவும் பதவி வகித்தார். இவரது பதவிக்காலத்தில் பாகிஸ்தானின் பயங்கரவாதிளுக்கு கிடுக்குப்பிடி போடப்பட்டது. பாகிஸ்தானுக்கு பல முறை எச்சரிக்கைகள் விடப்பட்டது. 1999 முதல் 2004 வரை பா.ஜ., தலைமயிலான அரசு முழுமையாக நிறைவேற்றியது. காங்கிரஸ் அல்லாத ஆட்சி நீடித்தது என்ற பெருமையையும் இந்நேரத்தில் பிடித்தது. 2004 ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை (மன்மோகன்சிங் பிரதமர் ) பிடித்தது. இதன்பிறகு வாஜ்பாய் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். இதனையடுத்து அத்வானி 2004 முதல் எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். 2005 ல் பா.ஜ., கட்சித்தலைவராக ராஜ்நாத்சிங் பதவி ஏற்றார். 2006ல் வாரணாசியில் நடந்த குண்டு வெடிப்பை கண்டித்தும் , காங்கிரஸ் அரசின் கையாலாகத்தனத்தை கண்டித்தும் பாரத் சுரக்ஷா என்ற ரத யாத்திரையை மேற்கொண்டார்.
கடந்த 2009 பார்லி பொதுத்தேர்தலில் அத்வானி பிரதம வேட்பாளர் என்று அறிவித்து பா. ஜ., ஓட்டு கேட்டது. ஆனால் அதில் காங்கிரஸ் கட்சியே ஜெயித்தது. இதனால் இவர் பிரதமராகும் வாய்ப்பு இல்லாமல் போனது.
பா.ஜ., வளர்ச்சியில் முக்கிய பங்கு பெற்ற அத்வானி இன்றைய பார்லி., கூட்டத்தொடர் முடிந்ததும் அவர் எதிர்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்கிறார். இவருக்கென பா.ஜ., புதிய பொறுப்பை ( பா.ஜ., பார்லிமென்ட் கட்சி சேர்மன்) என்ற பொறுப்பில் அமர வைத்து அழகு பார்க்கப்போகிறது. தற்போது அத்வானிக்கு வயது 83. எதிர்கட்சித்தலைவர் பொறுப்பு சுஷ்மாவுக்கு செல்கிறது. பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங்கின் பதவிக்காலமும் முடிகிறது. இவருக்கு பதில் இளம் தலைவரை அமர்த்த ஆர். எஸ். எஸ். முயற்சித்து வருகிறது.
Leave a Reply