கொழும்பு:இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா மீதான விசாரணையை, ராணுவகோர்ட் ஒத்திவைத்துள்ளது.
இலங்கை முன்னாள் ராணுவதளபதி சரத் பொன்சேகா, ராஜபக்ஷே அரசை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியது, ராணுவத்தில் இருக்கும்போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டு களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணுவ கோர்ட்டில் அவருக்கு எதிராக விசாரணை துவங்கியது. கோர்ட்டில் நேரில் ஆஜரானான பொன்சேகா, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். இதையடுத்து, இரண்டாவது விசாரணை நேற்று துவங்கியது. இந்த விசாரணையின்போதும், பொன்சேகா நேரில் ஆஜரானார்.அப்போது, பொன்சேகா தரப்பில் ஆஜரான வக்கீல்கள், பொன்சேகா வழக்கை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தீர்ப்பாய உறுப்பினர்களின் தகுதி குறித்து சந்தேகம் எழுப்பினர்.
விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களில் இருவர், பொன்சேகா, ராணுவ தளபதியாக இருக்கும்போது, ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் என்றும், மற்றொருவர், தற்போது ராணுவ தளபதியாக இருப்பவரின் உறவினர் என்றும் தெரிவித்தனர்.
மேலும், முதலாவது வழக்கில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள், அடுத்த வழக்கிலும் அதே பணியில் தொடர்வது சரிதானா என்றும் கேள்வி எழுப்பினர். விசாரணை குழு உறுப்பினர் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பொன்சேகா வழக்கு மீதான விசாரணை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
Leave a Reply