சென்னை:”சி.பி.எஸ்.இ., முறைக்கு மாற விரும்பும் பள்ளிகளுக்கு எல்லாம் அனுமதியை வாரி வழங்கிவிட மாட்டோம்,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில்:வேல்முருகன் – பா.ம.க: மனையியல் படிப்பை முடித்த 250 பேருக்கு ஆசிரியர் பணியிடங்களை வழங்க வேண்டும். அவர்களுக்கு வேறு வாய்ப்பில்லாமல் உள்ளனர்.சேகர்பாபு – அ.தி.மு.க: இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த 8,000 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில், வேலைவாய்ப்பு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி போராடிய 2,800 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இவர்களுக்கு, மாற்றுப் பணி கிடைக்க இனி வாய்ப்பில்லை. எனவே, இவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.சி.வி.சண்முகம் – அ.தி.மு.க: சமச்சீர் கல்வி இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக, சென்னை மற்றும் கோவையில் உள்ள மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., கல்வி முறைக்கு மாறிக் கொண்டு வருகின்றன. இந்த ஆண்டு தமிழகத்தில் சி.பி.எஸ்.இ., முறையில் 5,000 மாணவர்கள் தான் படிக்கின்றனர். அடுத்த ஆண்டு, அதிகம் பேர் படிப்பர். இதனால், சமச்சீர் கல்வியின் நோக்கம் மாறிவிடும்.அமைச்சர் தங்கம் தென்னரசு: ஹோம் சயின்ஸ் எனப்படும் மனையியல் படித்தவர்கள், பட்டத்தில் சயின்ஸ் என்ற பெயர் உள்ளதால், அறிவியல் ஆசிரியர்களாக நியமிப்பது எப்படி பொருத்தமாக இருக்கும். அவர்களது கல்வித் தகுதியை ஆராய வேண்டும். நிதிப் பிரச்னை என்றால் ஏற்கலாம்.
இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை, 1991ல் அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் படித்தவர்கள். பின், அவர்களுக்கென தனியாக தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் தற்போது கோருவது தாங்கள் படித்த காலத்தை வைத்து, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க கோருகின்றனர். எப்போது படித்திருந்தாலும், தேர்ச்சி பெற்ற தேதியில் இருந்து தான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்படும். அப்போது இருந்து தான் தகுதி பெறுகின்றனர். இவ்விஷயம் வேலைவாய்ப்புத் துறையின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது.சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக மாற்றிக் கொள்ள அனுமதி கேட்டு, இதுவரை இரண்டு விண்ணப்பங்கள் தான் வந்துள்ளன. இரு பள்ளிகளுமே நீலகிரியைச் சேர்ந்தவை. அவர்களிடம் சில விவரங்கள் கேட்டுள்ளோம். மேலும், சி.பி.எஸ்.இ.,க்கு மாற அனுமதி கேட்கும் பள்ளிகளுக்கு எல்லாம் வாரி வழங்கவிட மாட்டோம். சி.பி.எஸ்.இ.,க்கு மாற முயற்சி நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி, கோர்ட்டில் வழக்கு தொடர முயற்சிக்கின்றனர்.
Leave a Reply