ஏ.ஐ.சி.டி.இ., அனுமதிக்கு பொறியியல் கல்லூரிகள் தகவல் சமர்ப்பிப்பு

posted in: கல்வி | 0

சென்னை: தமிழகத்தில் 446 பி.இ., – பி.டெக்., கல்லூரிகள், ஒன்பது ஆர்கிடெக்சர் கல்லூரிகள் என மொத்தம் 455 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

இவற்றில் 28 கல்லூரிகள் மட்டுமே அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகள் மற்றும் அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள். மீதமுள்ள 427 கல்லூரிகள் தனியாருக்கு சொந்தமானவை. பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த ஏ.ஐ.சி.டி.இ., அனுமதியை பெற வேண்டும்.

கல்லூரிகளில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், ஆய்வுக்கூடம், நூலகம், ஆசிரியர்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி வழங்குகிறது.பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதற்காக ஏ.ஐ.சி.டி.இ., இந்த ஆண்டு முதல் புதிய விதிமுறைகளை உருவாக்கியது.

அதில், கல்லூரிகள் தங்களைப் பற்றிய முழு விவரங்களையும், ‘ஆன்-லைன்’ மூலம் ஏ.ஐ.சி.டி.இ.,க்கு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கல்லூரிக்கான இடம், கட்டட விவரம், ஆசிரியர்கள் எண்ணிக்கை, பயோமெட்ரிக் கைரேகை, அனுபவம் உள்ளிட்ட ஆசிரியர்களின் விவரங்கள், ஆய்வுக்கூட வசதி, நூலகம், கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை விவரம், தேர்ச்சி விகிதம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல விவரங்களை கல்லூரிகள் ஏ.ஐ.சி.டி.இ.,க்கு தெரிவிக்க வேண்டும்.

கல்லூரிகள் வழங்கிய விவரங்களில் தவறுகள் இருந்தால், கல்லூரி நிர்வாகி மற்றும் முதல்வர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஏ.ஐ.சி.டி.இ., புதிய விதிமுறைகளை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த சில தனியார் பொறியியல் கல்லூரிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. தமிழகத்தில் 427 தனியார் பொறியியல் கல்லூரிகள் மட்டுமின்றி எம்.பி.ஏ., – எம்.சி.ஏ., – கேட்டரிங் கல்லூரிகளையும் சேர்த்து 1,000க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன.

வழக்கு நிலுவையில் இருந்தபோதும், 600க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தங்களைப் பற்றிய தகவல்களை, ‘ஆன்-லைன்’ மூலம் ஏ.ஐ.சி.டி.இ.,க்கு தெரிவித்து விட்டன. தமிழக பொறியியல் கல்லூரிகளிலும் 300க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் தங்களைப் பற்றிய தகவல்களை, ‘ஆன்-லைன்’ மூலம் ஏ.ஐ.சி.டி.இ.,க்கு அனுப்பி விட்டன என ஏ.ஐ.சி.டி.இ., வட்டாரங்கள் தெரிவித்தன. கல்லூரிகளைப் பற்றிய தகவல்களை தனது இணையதளத்தில் வெளியிடவும் ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளது. இதனால், மாணவர்கள் பெரிதும் பயனடைவர். எந்தெந்தக் கல்லூரிகளில் என்ன வசதிகள் உள்ளன என்பதை மாணவர்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

கல்லூரிகளின், ‘விர்ச்சுவல் டூர்’ வீடியோவையும் ஏ.ஐ.சி.டி.இ., தனது இணையதளத்தில் வெளியிடவுள்ளது. பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் ஏ.ஐ.சி.டி.இ.,யில் அனுமதி பெற வேண்டும். தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இன்னும் ஏ.ஐ.சி.டி.இ., அனுமதியை பெறவில்லை. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என தற்போது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 427 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 90 – 95 சதவீத கல்லூரிகள் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதி பெற வேண்டும் என்றும், கோர்ட் வழக்கால் அதற்கான நடவடிக்கை எதுவும் துவக்கப்படவில்லை என்றும் ஏ.ஐ.சி.டி.இ., வட்டாரங்கள் தெரிவித்தன.

கல்லூரிகளை ஆய்வு செய்யாமல் அனுமதி வழங்க முடியாது என்பதையும் ஏ.ஐ.சி.டி.இ., வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. உதாரணமாக பொறியியல் கல்லூரிகள் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கும்போது, அந்த ஆண்டிற்கான வசதிகள் இருக்கிறதா எனப் பார்த்து அனுமதி வழங்கப்படுகிறது. இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்த, அந்த ஆண்டிற்கு தேவையான வசதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றனவா என ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்யாமல் அனுமதி வழங்கினால், வசதிகள் இல்லாவிட்டால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுவர் எனவும் ஏ.ஐ.சி.டி.இ., வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *