சச்சின், தோனிக்கு ரூ. 1.84 கோடி: ஐ.பி.எல்., ஏலத்தில் விலை நிர்ணயம்

புதுடில்லி : நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஏலத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சச்சின், தோனி, சேவக் போன்றவர்களுக்கு 1.84 கோடி ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளனர். இந்த ஏலத்தில் 62 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியன் பிரிமியர் லீக் சார்பில் (ஐ.பி.எல்.,) கடந்த மூன்று ஆண்டுகளாக “டுவென்டி-20′ தொடர் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற வீரர்களின் ஒப்பந்த காலம் முடிவடைந்ததால், நான்காவது தொடருக்காக வீரர்கள் ஏலம் விரைவில் நடக்கவுள்ளது. கடந்த முறை நடந்த ஏலத்தில் சச்சின், கங்குலி, டிராவிட், யுவராஜ் சிங் உள்ளிட்டவர்களுக்கு, நட்சத்திர வீரர்கள் அந்தஸ்து கொடுக்கப்பட்டது. இம்முறை வீரர்கள் தரத்தினைக் கொண்டு, பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி முதல் பிரிவில் சச்சின், தோனி, சேவக், ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் இடம் பெற்றுள்ளனர். இந்த வீரர்களுக்கு அடிப்படை விலையாக 1.84 கோடி ரூபாய் நிர்ணயித்துள்ளனர். இதில் சச்சின் (மும்பை இந்தியன்ஸ்) மற்றும் தோனியை (சென்னை சூப்பர் கிங்ஸ்) அந்தந்த அணிகள் தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளன.

இரண்டாவது பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு 1.3 கோடி ரூபாய் அடிப்படை விலை. இதில் “டுவென்டி-20′ ஸ்பெஷலிஸ்ட் யூசுப் பதான், அனுபவ சுரேஷ் ரெய்னா, வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் இடம் பெற்றுள்ளனர். ஐ.பி.எல்., இரண்டு மற்றும் மூன்றாவது தொடரில் சிறப்பாக செயல்படாத காம்பிர், விராத் கோஹ்லி, ராபின் உத்தப்பா, இர்பான் பதான், ஆஷிஸ் நெஹ்ரா, பிரவீண் குமார், இஷாந்த் சர்மா ஆகியோர் மூன்றாவது வகையில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடிப்படை விலை, 92 லட்ச ரூபாய். கடந்த முறை நட்சத்திர வீரர்களாக இருந்த கங்குலி, டிராவிட், கும்ளே, லட்சுமண் போன்றவர்கள் இந்த பிரிவில் தான் உள்ளனர்.

கடந்த 2005 முதல் இந்திய அணியில் இடம் பெற்று, உள்ளூர் கிரிக்கெட்டில் பங்கேற்று வரும் சகா, மனோஜ் திவாரி, அசோக் டின்டா, சத்தீஸ்வர் புஜாரா உள்ளிட்ட பல வீரர்கள் நான்காவது பிரிவில் (46 லட்சம்) உள்ளனர். ஐந்தாவது மற்றும் கடைசி பிரிவில் (23 லட்சம்) மன்பிரீத் கோனி, சுதீப் தியாகி, ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *