பிரிட்டனில் கைது செய்யப்படாதிருக்க உதவுங்கள்: மகாராணிக்கு மஹிந்தர் இரகசிய கடிதம்

posted in: உலகம் | 0

தான் பிரிட்டனில் கைது செய்யப்படாமலிருப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கெஞ்சும் வகையில் இங்கிலாந்தின் அரசி எலிசபெத் மகாராணியாருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரகசியக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளமை ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து உறுதி செய்யப்படுகின்றது.

அக்கடிதம் ஜனாதிபதியின் இரண்டாம் பதவிப் பிரமாணத்துக்கு முன் மகாராணிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மிக உருக்கமான முறையில் கடிதம் தயாரிக்கப்பட்டிருப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

பிரிட்டன் சுற்றுப் பிரயாணத்தின் போது தான் எதிர்கொள்ள நேரிடும் சவால்கள் மற்றும் தன்னை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்பன குறித்து மகாராணிக்கு அதில் விளக்கமாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

“மாட்சிமை தாங்கிய மகாராணியின் தலைமையிலான பிரித்தானியாவினால் அறிமுகம் செய்யப்பட்ட பாராளுமன்ற முறைமையின் கீழ் நான் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருக்கின்றேன்.ஜனாதிபதித் தோ்தலின் போதும் நான் பெருமளவான இலங்கை மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.இன, மத, மொழி பேதமின்றி இலங்கையின் பெருவாரியான மக்கள் என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.உலகின் மோசமான பயங்கரவாத அமைப்பைத் தோற்கடிப்பதற்கு நான் தலைமைத்துவம் வழங்கியதன் காரணமாகவே என் தேசத்து மக்கள் என் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்” என்றும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேக்காவை சிறைப்படுத்தி வைப்பதற்கு நேரிட்ட விடயங்கள் அவரது குற்றங்கள் குறித்தும் ஜனாதிபதி தனது கடிதத்தில் விளக்கமளித்துள்ளார்.

அதற்கு மேலாக ” நான் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் குறித்த விடயங்களை விரைவாக முன்னெடுக்க உள்ளேன். அவ்வாறான நிலையில் பிரித்தானியாவில் என் மீதான நடவடிக்கைகள் அதனைத் தாமதப்படுத்தச் செய்யும். எனவே நான் பிரித்தானியாவில் இருக்கும் காலப் பகுதிக்குள் எதுவித சட்டச் சிக்கல்களிலும் சிக்காதிருக்கும் வண்ணம் மாட்சிமை தாங்கிய மகாராணியின் கருணையை எதிர்பார்க்கின்றேன்” என்பதாக அவர் தன் கடிதத்தை நிறைவு செய்துள்ளார்.

கடிதத்தைப் பெற்றுக்கொண்ட மகாராணியின் தரப்பிலிருந்து வழங்கப்பட்ட ஏதோ ஒரு உறுதிமொழியின் பேரிலேயே ஜனாதிபதி மஹிந்த தைரியமாக பிரித்தானியாவுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இது ஒருபுறமிருக்க தான் கைது செய்யப்படாதிருக்க வேண்டி இந்தளவுக்கு ஒரு நாட்டுத் தலைவர் இறங்கிப் போய் கெஞ்ச நோ்ந்துள்ள சந்தர்ப்பம் உலக வரலாற்றில் இதுவே முதல் தடவை என்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *