சமையல் கேஸ், டீசல் விலை உயர்வை ‘கண்ணீரால் காத்த’ வெங்காயம்!

posted in: மற்றவை | 0

டெல்லி: சமையல் கேஸ், டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக முடிவெடுக்க இன்று கூட இருந்த மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

வெங்காய விலை உயர்வால் நாடு முழுவதும் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில் சமையல் கேஸ் விலையையும் டீசல் விலையையும் உயர்த்தினால் கதர்ச் சட்டை காங்கிரசார் ரோட்டில் நடமாட முடியாத நிலை ஏற்படும் என்ற அச்சத்தில் மத்திய அரசு இந்த விலை உயர்வை ஒத்தி வைத்துள்ளது.

டீசல், கேஸ் விலையை உயர்த்துவது தொடர்பாக முடிவெடுக்கும் மூத்த அமைச்சர்கள் குழுக் கூட்டம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்தக் கூட்டம் மாத இறுதிக்கு தள்ளிவைக்கப்பட்டுவிட்டது.

இக் குழுவில் இடம் பெற்றுள்ள சில அமைச்சர்கள் டெல்லியில் இல்லாததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சப்பைக்கட்டு கட்டியுள்ளது. உண்மையான காரணம், வெங்காய விலை தான் என்று கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால் டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் சமையல் கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாயும் உயர்த்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

ஆனால் கடந்த ஜூன் மாதத்தில்தான் சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ. 50 உயர்த்தப்பட்டது. எனவே சமையல் கேஸ் விலையை மேலும் ரூ. 50 மட்டும் உயர்த்த அமைச்சர்கள் குழு முடிவு செய்யும் என்று தெரிகிறது.

இந் நிலையில் வெங்காய விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துள்ளது. இதன் விலை ஓரளவுக்கு நன்றாகவே குறைந்தவுடன் கேஸ், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *