ஸ்பெக்ட்ரம் விசாரணைக்காக நேரில் ஆஜராகத் தயார்-மன்மோகன் கடிதம்

posted in: அரசியல் | 0

டெல்லி: ஸ்பெக்ட்ரம் விசாரணைக்காக நேரில் ஆஜராகத் தயார் என்று பொதுக் கணக்குக் கமிட்டித் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின்போது இதுகுறித்து தெரிவித்திருந்தார் மன்மோகன் சிங். ஜேபிசி விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் செய்து வரும் அமளிக்குப் பதிலடியாக இது கருதப்பட்டது. இந்தநிலையில் தற்போது இந்த விருப்பத்தை வெளியிட்டு முரளி மனோகர் ஜோஷிக்கு பிரதமர் கடிதம் அனுப்பியுள்ளார்.

2 ஜி விவகாரம் பற்றி முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொது கணக்கு குழு ஆய்வு செய்கிறது. பொதுக்கணக்கு குழு முன் தலைமை தணிக்கை அதிகாரி வினோத்ராய் ஆஜரானார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தணிக்கை அறிக்கை குறித்து விளக்கமளித்தார்.

இந்த நிலையில், பிரதமர் கடிதம் எழுதியுள்ளார். முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான குழுவில் மொத்தம் 22 எம்.பிக்கள் இடம் பெற்றுள்ளனர். ஜோஷிக்கு பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கத் தயார் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஜோஷி இந்தக் கோரிக்கையை ஏற்பாரா என்பது தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *