சிட்னி : ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணியிடம் பறிகொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை, அந்நாட்டு பத்திரிகைகள் “கந்தல் துணி” என்று வர்ணித்துள்ளன.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் போட்டி, எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. அடியெல்டில் நடந்த 2வது போட்டியில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. பெர்த்தில் நடந்த 3வது போட்டியில் ஆஸ்திரேலியா அணி பழி தீர்த்துக் கொண்டது, 267 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இந்நிலையில், 4வது போட்டி, மெல்போர்னில் துவங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை, அந்நாட்டு பத்திரிகைகள் “கந்தல் துணி” என்று வர்ணித்திருப்பது ஆஸி., ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டிங் மன்னிப்பு : மெல்போர்ன் டெஸ்டில் அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாண்டிங், இச்சம்பவத்துக்கு நேற்று மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இது குறித்து இவர் கூறுகையில்,”” ஒரு கேப்டன் என்ற முறையில், அணியின் நலனைக் கருத்தில் கொண்டு தான், அம்பயர்களிடம் அவ்வாறு நடந்து கொண்டேன்.
எனது நடவடிக்கைகளில் தவறு இருந்தால், அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்.
Leave a Reply