அழகிரி விவகாரம்-சோனியாவுடன் டி.ஆர்.பாலு அவசர சந்திப்பு

posted in: அரசியல் | 0

டெல்லி: மு.க.அழகிரி தனது அமைச்சர் பதவியிலிருந்த விலகுவதாக முதல்வர் கருணாநிதியிடம் கடிதம் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திமுக எம்பிக்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இன்று டெல்லியில் அவசரமாக சந்தித்துப் பேசினார்.

இன்று காலை அழகிரி ராஜினாமா குறித்த செய்திகள் சென்னையை கலக்க ஆரம்பித்த அதே நேரத்தில் விமானத்தில் டெல்லி விரைந்தார் பாலு. அங்கு சோனியா காந்தியை அவசரமாக சந்தித்துப் பேசினார் டி.ஆர்.பாலு.

இந்த சந்திப்பு குறித்து டி.ஆர்.பாலு பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

புத்தாண்டையொட்டி மரியாதை நிமித்தமாக சோனியா காந்தியை சந்தித்தேன். அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன் என்றார்.

அழகிரி பதவி விலகியுள்ளாரா என்ற கேள்விக்கு, இல்லை என்று மறுப்பு தெரிவித்தார் பாலு.

ஆனால் அழகிரி ராஜினாமா விவகாரம் தொடர்பாக சோனியாவிடம் முதல்வர் கருணாநிதி சார்பில் பாலு விளக்கம் அளித்ததாகவும், அழகிரி பதவி விலகுவதில் பிடிவாதம் பிடித்தால், அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை அமைச்சராக நியமிப்பது குறித்தும் சோனியாவிடம் பாலு பேசியதாகவும் தெரிகிறது.

மேலும் இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் முக்கிய செய்தியை சோனியாவிடம் பாலு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *