டெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய அமைச்சரவை மாற்றம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில் திமுகவின் டி.ஆர்.பாலு மீ்ண்டும் அமைச்சராக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக அமைச்சரவை மாற்ற செய்திகள் தீவிரமாக உலா வந்து கொண்டிருந்தன. குடியரசுத் தலைவரை நேரில் பார்த்து இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினார் பிரதமர். மேலும், நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பிரதமர் 2 மணி நேரம் இறுதிக் கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டார். இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு அமைச்சரவை மாற்றம் நடைபெறவுள்ளது.
மிகப் பெரிய அளவில் இல்லாமல், சிறிய அளவிலான மாற்றமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில புதிய அமைச்சர்கள் சேர்க்கப்படவுள்ளனர். சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படுகிறது. சிலர் நீக்கப்படவுள்ளனர்.
ஊழலை மையமாக வைத்து எதிர்க்கட்சிகள், அரசை வெளுத்து வாங்கி வருவதாலும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஜேபிசி விசாரணையை வலியுறுத்தி வருவதாலும், இதை முன்வைத்து பட்ஜெட் கூட்டத் தொடரையும் முடக்க அவர்கள் தீர்மானித்துள்ளதாலும், அதை சமாளிக்கும் வகையில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது.
இந்த மாற்றத்தில் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், எஸ்.எம்.கிருஷ்ணா, அந்தோணி ஆகியோரது துறைகளில் கை வைக்கப்படாது.
வீரப்ப மொய்லி, கமல்நாத், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சி.பி.ஜோஷி ஆகியோர் நீக்கப்படுவர் என்று தெரிகிறது.
இணை அமைச்சர்களாக உள்ள சல்மான் குர்ஷித், பிரபுல் படேல் ஆகியோருக்கு கேபினட் அமைச்சர் பதவி கிடைக்கலாம்.
காலியாக உள்ள இடங்களுக்குப் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவர். கபில் சிபல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக்கப்படுவார்.
இதுவரை அந்தப் பொறுப்பை வகித்து வந்தவரான திமுகவின் ராசா ராஜினாமா செய்து விட்டதால், திமுகவுக்கு ஒரு அமைச்சர் பதவி குறைந்துள்ளது. அந்த இடத்திற்கு டி.ஆர்.பாலுவை நியமிக்கலாம் என்று தெரிகிறது.
திரினமூ்ல் காங்கிரஸ் மேலும் ஒரு அமைச்சர் பதவியை எதிர்பார்த்துள்ளது. இதனால் அது கொடுக்கப்படக் கூடும் என்று தெரிகிறது.
Read: In English
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவரும், தமிழருமான மீனாட்சி நடராஜனும் அமைச்சராக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இவர் இளைஞர் காங்கிரஸில், தனது அபாரமான செயல்பாடுகளால் ராகுல் காந்தியை ஈர்த்தவர் ஆவர்.
இதற்கிடையே, பல்வேறு சர்ச்சைகளிலும், தேவையில்லாத பேச்சுக்களிலும் சிக்கியவரான ஜெயராம் ரமேஷ் மற்றும் காமன்வெல்த் போட்டிக் குழப்பம் உள்ளிட்டவற்றில் சிக்கியவரான எம்.எஸ்.கில் ஆகியோர் நீக்கப்படுவார்கள் என்று ஒரு கருத்தும், வேறு இலாகாக்களுக்கு மாற்றப்படுவார்கள் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.
Leave a Reply