வீட்டுக் கடன் இனி ரொம்ப ரொம்ப ‘காஸ்ட்லி’!

மும்பை: இந்திய வங்கிகள் வீட்டுக்கடனுக்கு விதிக்கும் வட்டியை திடீரென்று உயர்த்தியுள்ளன. குறைந்தபட்சம் 25 புள்ளிகளிலிருந்து அதிகபட்ம் 125 புள்ளிகள் வரை வட்டி உயர்த்தப்பட்டுள்ளதால், தவணைத் தொகை அதிகரித்துள்ளது.

இந்த எச் டி எப் சி உள்பட 4 வங்கிகள் ஒரேநேரத்தில் வீட்டுக் கடன் வட்டியை 25 புள்ளிகள் உயர்த்திவிட்டதாக இன்று அறிவித்துள்ளன. இதன் மூலம் 9.75 சதவீதமாக இருந்த வீட்டுக்கடன் வட்டி 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. ரூ 75 லட்சத்துக்கும் அதிகமான கடன்களுக்கான வட்டி 10.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் 15 ஆண்டு தவணை கடன் முறையில் ரூ 1 லட்சத்துக்கு செலுத்தும் தவணையில் கூடுதலாக ரூ17 முதல் ரூ 51 வரை செலுத்த வேண்டி வரும்.

எச்டிஎப்சி தவிர, பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஒவர்சீஸ் வங்கி மற்றும் இந்தியன் வங்கி போன்றவை 50 புள்ளிகள் வட்டியை உயர்த்தியுள்ளன (அரை சதவீதம்). இந்த வங்கிகளில் மாறும் வட்டி வீதம் 9 சதவீதத்திலிருந்து 9.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ 30 லட்சத்துக்கு அதிகமான கடனுக்கு மேலும் 25 புள்ளிகள் உயர்த்தப்பட்டு 9.75 சதவீதமாக்கப்பட்டுள்ளது.

இந்த வட்டி வீத உயர்வு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு. இன்னும் சில மாதங்கள் கூடுதலாக தவணைத் தொகை செலுத்த வேண்டிய அல்லது தவணைத் தொகையை அதிகமாகக் கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

எல்ஐசி தற்போதுள்ள வட்டி வீதமான 9.75 சதவீதத்தில் புதிய மாற்றம் செய்யவில்லை. நேஷனல் ஹவுசிங் வங்கியில் முதல் 5 ஆண்டுகளுக்கு வட்டி வீதம் 9.75 சதவீதமாகவும், அடுத்துவரும் ஆண்டுகளில் இது 10.1 சதவீதமாகவும் உள்ளது.

இந்த மாற்றங்கள் இத்துடன் நின்றுவிடாது என்றும், வரும் நாட்களில் ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தும் போது மேலும் உயரும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *