கடந்த ஆண்டில் சென்னை ஐகோர்ட், மதுரை ஐகோர்ட் கிளையில் மொத்தம் இரண்டு லட்சத்து 48 ஆயிரம் மனுக்கள் பைசல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் கிரிமினல், சிவில் வழக்குகளும் அடங்கும்.இப்போதெல்லாம் எந்த பிரச்னைக்கும் மக்கள் உடனடியாக நாடுவது கோர்ட்டை தான். அதனால், கோர்ட்டில் தாக்கலாகும் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. வழக்குகளின் எண்ணிக்கை, மக்கள் தொகைக்கு ஏற்ப நீதிபதிகள் உள்ளனரா என்றால், “இல்லை’ என்பதே பதில். இருக்கிற எண்ணிக்கையை வைத்துக் கொண்டு, வழக்குகளின் மீதான விசாரணையை விரைவுபடுத்தி முடித்து வருகிறது நீதித்துறை.நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நீதித்துறை பல வழிகளைக் கையாண்டு வருகிறது. சென்னை ஐகோர்ட்டை பொறுத்தவரை, நீதிபதிகளின் பணி நேரம் அதிகரிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன், நீதிபதிகளின் பணி நேரம் என்பது ஐந்து மணியாக இருந்தது. தற்போது ஐந்தரை மணி நேரமாக உள்ளது.மக்கள் நீதிமன்றம் என்னும் “லோக் அதாலத்’, மத்தியஸ்தம், சமரச மையங்களும் ஐகோர்ட் வளாகத்தில் இயங்கி வருகின்றன. நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை, இருதரப்பிலும் ஒப்புக் கொண்டால் இந்த சமரச மையங்கள் மூலம் தீர்த்துக் கொள்ளலாம். சிறு வழக்குகள் முதல் பெரிய வழக்குகள் வரை இங்கு தீர்க்கப்படுகிறது.சென்னை ஐகோர்ட்டை பொறுத்தவரை, கடந்த டிசம்பர் 31ம் தேதியன்று நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 53 ஆயிரம். இதில், சிவில் வழக்குகள் மட்டும் மூன்று லட்சத்து 19 ஆயிரம். கிரிமினல் வழக்குகள் 34 ஆயிரம். மதுரை ஐகோர்ட் கிளையைப் பொறுத்தவரை, நிலுவையில் உள்ள வழக்குள் 94 ஆயிரம். சிவில் வழக்குகள் மட்டும் 82 ஆயிரம். கிரிமினல் வழக்குகள் 12 ஆயிரத்துக்கும் மேல்.கடந்த ஆண்டில் மட்டும், சென்னை ஐகோர்ட்டில் மொத்தம் ஒரு லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேல் வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. இதில், சிவில் வழக்குகள் ஒரு லட்சத்து 32 ஆயிரம். கிரிமினல் வழக்குகள் 43 ஆயிரத்துக்கும் மேலாகும். மதுரை ஐகோர்ட் கிளையில் மொத்தம் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. இவற்றில், சிவில் வழக்குகள் 48 ஆயிரத்துக்கு மேலும், கிரிமினல் வழக்குகள் 23 ஆயிரத்துக்கு மேலும் உள்ளது.பைசல் செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும், கடந்த ஆண்டு மட்டுமே தாக்கல் ஆன வழக்குகள் என, கூற முடியாது. தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகளில், சில ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வழக்குகளும் அடங்கும்.சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து 83 ஆயிரம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில், ஒரு லட்சத்து 34 ஆயிரம் சிவில் வழக்குகள், 49 ஆயிரம் கிரிமினல் வழக்குகள். மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கலான 81 ஆயிரம் வழக்குகளில், 53 ஆயிரம் சிவில் வழக்குகளும், 28 ஆயிரம் கிரிமினல் வழக்குகள்.2009ம் ஆண்டை ஒப்பிடும் போது, 2010ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்குகளின் எண்ணிக்கை கூடுதலாக 10 ஆயிரம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், கிரிமினல் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மதுரை ஐகோர்ட் கிளையில் சிவில், கிரிமினல் வழக்குகள், 2009ம் ஆண்டை விட 2010ம் ஆண்டு அதிக எண்ணிக்கையில் தாக்கலாகியுள்ளன.தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு அதிகமாக இருந்தாலும், 2009ம் ஆண்டை ஒப்பிடும் போது, 2010ம் ஆண்டில் தீர்க்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறைவு தான். 2009ம் ஆண்டில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்குகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரம். தீர்க்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 51 ஆயிரத்துக்கும் மேல். கிரிமினல் வழக்குகள் தாக்கல் ஆனது 52 ஆயிரம் என்றால், தீர்க்கப்பட்டது 56 ஆயிரம்.மதுரை ஐகோர்ட் கிளையில், 2009ம் ஆண்டில் 51 ஆயிரம் சிவில் வழக்குகள் தாக்கலாகின. அந்த ஆண்டில், 38 ஆயிரம் வழக்குகளில் தான் தீர்ப்பளிக்கப்பட்டது. கிரிமினல் வழக்குகளைப் பொறுத்தவரை, 22 ஆயிரம் வழக்குகள் தாக்கல் ஆயின. 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்க்கப்பட்டன.மே மாதம் தவிர மற்ற அனைத்து மாதங்களிலும், தாக்கலாகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். மே மாதம் ஐகோர்ட்டுக்கு விடுமுறை என்பதால், அந்த மாதத்தில் விடுமுறை கால கோர்ட் மட்டுமே சில நாட்களுக்கு இயங்கும்.சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக இருக்க வேண்டும். தற்போது 51 நீதிபதிகள் உள்ளனர். காலியிடங்களை நிரப்ப ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் நடவடிக்கை எடுத்து வருகிறார்.60 நீதிபதிகளையும் கொண்டு முழு அளவில் செயல்படும் போது, வழக்குகளின் தேக்கம் குறையும். வாய்தா வாங்குவது, நீண்ட நாட்களுக்கு விசாரணையை தள்ளிப் போடுவது, கோர்ட் புறக்கணிப்பு, எதற்கெடுத்தாலும் வழக்கு போடுவது, அதிக விடுமுறை இவையும் வழக்குகளின் தேக்கத்துக்கு முக்கிய காரணம்.
Leave a Reply