விமான எரிபொருள் விலை உயர்வு.. டிக்கெட் விலையும் உயர்கிறது!

டெல்லி: விமானங்களுக்கு நிரபப்படும் பெட்ரோலின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விமான டிக்கெட் விலை மேலும் உயர்த்தப்படுகிறது.

கோடை விடுமுறை என்பதால் இந்த விலை உயர்வு பயணிகளை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை எண்ணெய் வர்த்தக நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் விமான எரிபொருள் விலையை 5 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன.

அக்டோபர் மாதத்திலிருந்து தற்போது வரை ஒன்பதாவது முறையாக விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் டெல்லியல், ஆயிரம் லிட்டர் விமான எரிபொருளுக்கு கூடுதலாக ரூ.2,104 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரம் லிட்டர் விமான பெட்ரோல் இப்போது ரூ.53,538-ஆக விற்கப்படுகிறது. மும்பையில் ரூ.53,538-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 16ம்தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து விமான சேவை நிறுவனங்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவினத்தில் எரிபொருளுக்கான செலவு மட்டுமே 40 சதவீதமாக உள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் உயர்வு காரணமாக, டிக்கெட் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கெனவே அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்கள் எந்த அறிவிப்புமின்றி 2 முறை டிக்கெட் விலையை உயர்த்திவிட்டது நினைவிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *