45 ஆயிரம் இந்தியருக்கு வேலை: மலேசியா நிறைவேற்றுமா?

posted in: உலகம் | 0

கோலாலம்பூர்:”மலேசிய நிறுவனங்களில் பணியாற்ற, 45 ஆயிரம் இந்தியர்களை நியமிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது’ என, மலேசிய நாட்டின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், முறையாக விசாரிக்காமல் வெளிநாடு சென்றால், சாலையோர ஓட்டல்களில் தான் பணியாற்ற வேண்டி வரும் என, இந்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மலேசியாவைப் பொறுத்த வரை கட்டுமானத் தொழில், ஓட்டல்கள், பெரிய தோட்டங்களில் வெளிநாட்டை சேர்ந்த தொழிலாளர்களே அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர்.இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சில ஏஜன்டுகள், வெளிநாட்டு ஆசை காட்டி பலரையும் மலேசியாவிற்கு அழைத்து செல்கின்றனர். கவர்ச்சியான சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்த சூழலில், 45 ஆயிரம் இந்தியர்களை புதியதாக நியமிக்க மலேசிய அரசு முன்வந்துள்ளது.இருப்பினும்,போலிகளிடம் யாரும் ஏமாற வேண்டாம் என, இந்திய ஐ கமிஷன் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து கமிஷன் அதிகாரிகள் மேலும் கூறியதாவது:மலேசியாவில் பணி வாய்ப்பை தரும் நிறுவனத்தின் பின்னணி, வேலை வாங்கித் தரும் ஏஜன்ட் ஆகியோரைப் பற்றி நன்கு விசாரித்து விட்டு பின், பணியில் சேர வேண்டும். மலேசியாவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் இந்திய தொழிலாளர்களுக்கு ஆறு மாதம் வரை சம்பள பாக்கி வைத்துள்ளன. அத்துடன், இந்தியர்களை இழிவாகவும் நடத்தி வருகின்றன. இவ்வாறு பிரச்னையில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்தியாவில், நல்ல ஓட்டல்களில் பணியாற்றிய சிலரிடம், மலேசியாவில் மாதம் 35 ஆயிரம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தை கூறி, அவர்களை அழைத்து வந்த ஏஜன்டுகள், மலேசியாவில் ஒட்டல் வேலைக்கு சேர்த்தனர். ஆனால், நாளடைவில், அது பிளாட்பாரத்தில் உள்ள ஓட்டல் என்பது தெரிந்தது.இவ்வாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *