பகுதி நேர எம்.பி.ஏ. படிப்பிற்கு ஏ.ஐ.சி.டி.இ. தடை

posted in: கல்வி | 0

எந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திலும் பகுதி நேர அல்லது மாலை நேர படிப்புகளை நடத்த அனுமதிப்பதில்லை என்று ஏ.ஐ.சி.டி.இ. முடிவு செய்துள்ளது.

தற்போது பல மேலாண்மை கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பகுதி நேர எம்.பி.ஏ. படிப்புகள் அடுத்த கல்வியாண்டு முதல் அனுமதிக்கப்படாது. மேலும் நாடு முழுவதிலுமுள்ள மேலாண்மை கல்வி நிறுவனங்கள் தங்களின் பகுதி நேர படிப்புகளை புதுப்பிக்க, ஏ.ஐ.சி.டி.இ -க்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏனெனில் பகுதி நேர எம்.பி.ஏ. படிப்பிற்கு ஏ.ஐ.சி.டி.இ. வழங்கிய அனுமதிகளை பல மேலாண்மை கல்வி நிறுவனங்கள், வேறு பல படிப்புகளை நடத்துவதற்கு தவறாக பயன்படுத்திக் கொள்கின்றன.

அத்தகைய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை சரியாக பின்பற்றுவதில்லை. எனவேதான் இத்தகைய நடவடிக்கையை ஏ.ஐ.சி.டி.இ. எடுத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி பெற்ற சுமார் 2500 மேலாண்மை கல்வி நிறுவனங்கள் உள்ளன.

ஏ.ஐ.சி.டி.இ. எடுத்த இந்த முடிவை பல மேலாண்மை கல்வி நிறுவனங்கள் எதிர்த்துள்ளன. இதுபோன்ற முடிவால், வேலைசெய்து கொண்டே படிக்க நினைக்கும் பலருக்கு உயர்கல்வி கிடைக்காமல் போய்விடும் என்று அவை குற்றம் சுமத்துகின்றன. மேலும் ஏ.ஐ.சி.டி.இ. முடிவை எதிர்த்து ஒரு பொதுநல வழக்கை மும்பை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *