ஜப்பான் நிலநடுக்கத்தால் பூமி சுற்றும் வேகம் அதிகரிப்பு

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : “ஜப்பானில் சமீபத்தில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம், பூமி சுற்றும் வேகத்தை அதிகரித்துள்ளது. அதனால், ஒரு நாளின் நேரத்தில் குறைவு ஏற்படும்’ என்று, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் கடந்த 11ம் தேதி நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி ஏற்பட்டது. அந்நாட்டின் மூன்று மாகாணங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயின. மேலும், இரண்டு மாகாணங்கள் ஓரளவு பாதிக்கப்பட்டன. ஜப்பான் பல தீவுக் கூட்டங்களால் ஆன நாடு. எனினும், ஹொக்கைடோ, ஹோன்ஷூ, ஷிகோக்கு, கியூஷூ என்ற நான்கு பெரிய தீவுகள் தான் முக்கியமானவை. இவற்றிலும், ஹோன்ஷூ தான் மிகப் பெரியது. இதில் தான், தலைநகர் டோக்கியோ உள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஹோன்ஷூ தீவு, 8 அடி நகர்ந்துள்ளதாகவும், பூமியின் அச்சு 17 செ.மீ., நகர்ந்துள்ளதாகவும் அமெரிக்க நிலவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் மேலும் கூறியதாவது:தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் பூமியின் எடையில் சிறிது மாற்றம் நிகழ்ந்துள்ளது. அது சுற்றும் வேகம் சிறிது அதிகரித்துள்ளது. இதனால், ஒரு நாளில் மொத்த வினாடிகளில் 1.8 மைக்ரோ வினாடிகள் குறையும். ஒரு நாள் என்பது 86,400 வினாடிகள் கொண்டது.
இந்த மாற்றத்தால், பாதிப்பு எதுவும் ஏற்படாது. இதுபோன்ற அச்சு மாற்றங்கள் பூமியின் வரலாற்றில் சகஜம் தான். கடந்த 2010ல் சிலியில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் நிலநடுக்கத்தால், ஒரு நாளில் 1.26 மைக்ரோ வினாடிகளும், 2004ல் சுமத்ராவில் நிகழ்ந்த 9.1 ரிக்டர் நிலநடுக்கத்தால் 6.8 மைக்ரோ வினாடிகளும் குறைந்துள்ளன.இவ்வாறு நிபுணர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *