தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் குறைந்தபட்சம் ரூ 300 முதல் அதிகபட்சம் ரூ 3000 வரை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்துள்ளது.

தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு 45 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 45 சதவீதத்தில் இருந்து 51 சதவீதமாக உயர்த்தியது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் போதெல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தப்படுவது வழக்கம்.

தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இந்த 6 சதவீத அகவிலைப்படி உயர்வு தங்களுக்கு கிடைக்காது என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் கருதினார்கள்.

அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான் என்ற அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

அந்த உத்தரவில் தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 45 சதவீத அகவிலைப்படி 1.1.2011 முதல் 51 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. ஜனவரி, பிப்ரவரி மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை மார்ச் 31-ந் தேதிக்குப் பிறகு வழங்கப்படும்.

இந்த உத்தரவு உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், மக்கள் நல பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும்.

மேலும், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். இதுதவிர, ரூ.600-க்கு குறைவாக தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு மாதம் ரூ.20-ம் ரூ.600-க்கு மேல் பெறுவோருக்கு மாதம் ரூ.40-ம் ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *