டெல்லி: உருது மொழியானது இந்தியாவின் ஒவ்வொரு பள்ளியிலும் கற்பிக்கப்பட வேண்டும் என்று மத்திய மனிதவள அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய மொழியாக உருது இருப்பதால், அம்மொழியானது இந்தியாவின் ஒவ்வொரு பள்ளியிலும் கற்பிக்கப்பட வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் மனிதவள அமைச்சர் கபில் சிபல்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் உருது துறை பொன்விழா ஆண்டு விழாவில் பேசிய அமைச்சர் இதுகுறித்து கூறியதாவது, “நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளும் உருதுவை ஒரு பாடமாக கற்பிக்கும் விதமாக ஒரு திட்டத்தை செயல்படுத்த எனக்கு விருப்பமாக உள்ளது.
இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒரு பெரிய பங்கை ஆற்றியிருக்கும் உருது மொழி, பல சிறந்த இலக்கியவாதிகளையும் தன்பால் ஈர்த்த பெருமையைக் கொண்டது. பல சிறந்த இலக்கியப் படைப்புகள் உருது மொழியில் உள்ளன. உருதுமொழி எப்போதும் இறக்காது, ஏனெனில் அது நம் இதயத்தோடு தொடர்புடைய மொழி.
இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தில் ஒரு சிறந்த இடத்தை உருதுமொழி பெற்றுள்ளது. இந்த மொழியின் மூலம் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு நாம் பல படிப்பினைகளைக் கொண்ட செய்திகளை வழங்க முடியும். மேலும் இந்த மொழி பெரியளவில் வளர்ச்சியடைய அது வர்த்தக நடவடிக்கைகளுடன் இணைக்கப்படவும் வேண்டும்” என்றார்.
Leave a Reply