தேர்வு முறைகளை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவர் சி.என்.ஆர். ராவ், உயர் கல்வி வளர்ச்சிக்காக 4 பக்க பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை தயாரித்து மத்திய அரசுக்கு அளித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேருவதுக்கு தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தேர்வினை மட்டும் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 10 உயர் கல்வி நிலையங்களை தேர்வு செய்து, அவற்றை வளரச்சியடைந்த நாடுகளில் உள்ள மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் ஆராய்ச்சி தரம் மிக்கதாக மாற்றி அமைக்க அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.
ஒரு மாணவர், உயர் கல்வி பெறுவதற்காக பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டி உள்ளது. இதனால், அவர்களுக்கு உயர் கல்வி மீதான ஈடுபாடே குறைந்துவிடுகிறது. அதிக சிரமத்திற்குள்ளாகிறார்கள்.
மேலும், மாணவர்களுக்கு கல்வியாண்டு இறுதியில் நடத்தப்படும் தேர்வு பற்றியே முழு கவனமும் உள்ளது. பாடத்தை புரிந்து படிக்காமல், இறுதித் தேர்வில் மதிப்பெண் பெறுவதை நோக்கியே படிக்கிறார்கள். எனவே, நமது தேர்வு முறையை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும். படிக்கும் காலத்திலேயே, படிக்கும் விஷயம் குறித்து ஆராய்ந்து அறியும் வகையில் பாடப்பிரிவுகளை அமைக்க வேண்டும்.
தற்போதைய வளர்ச்சிக்கு ஏற்ப, படைப்பாற்றல் மிக்க, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறன் கொண்ட இளைஞர்களை உருவாக்க வேண்டும்.
அதற்கு தகுந்தாற்போல நமது கல்வித் துறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இதற்காக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சக துறையில், உயர் கல்வி மேம்பாட்டுக்கு புதிய செயல்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக சிறப்பு பணிக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
அடுத்த 12 மாதங்களுக்குள் இந்த திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். அத்துடன் உயர் கல்வியை தேசிய இயக்கமாகவும் அறிவிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply