அ.தி.மு.க.வினர் மீது தொடர் தாக்குதல்: தேர்தல் கமிஷன் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஜெயலலிதா வற்புறுத்தல்

posted in: அரசியல் | 0

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வாக்குப்பதிவிற்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே உள்ள ஒரு மாத இடைவெளியிலும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், சட்டம் -ஒழுங்கை பராமரிக்கின்ற ஒரே ஒரு பொறுப்பு தான் தி.மு.க. அரசுக்கு இருக்கிறது. ஆனால் அந்தப் பொறுப்பைக் கூட நிறைவேற்ற முடியாத லாயக்கற்ற அரசாக விளங்குவதோடு மட்டுமல்லாமல், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது.

அ.தி.மு.க. உடன் பிறப்புகள் மீதும், தோழமைக் கட்சிகளைக் சார்ந்த தொண்டர்கள் மீதும் தி.மு.க.வினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று நேற்று நான் குறிப்பிட்டு இருந்தேன். அதை நிரூபிக்கும் விதமாக, பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநீர் மலை பகுதியில் கழக உடன் பிறப்புகள் மீது தி.மு.க.வினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் கழக உடன் பிறப்புகள் ராமு, முனுசாமி, கங்காதரன் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதே போன்று தி.மு.க. வினரால் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தில், ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட 16-வது வட்டத்தைச் சேர்ந்த அன்புச்சகோதரர் குப்பன், ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட 14-வது வட்டத்தைச் சேர்ந்த அன்புச் சகோதரர்கள் மதன், சந்திரசேகர் ஆகியோர் படுகாயம் அடைந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது போன்ற பல வன்முறைச் செயல்கள் தி.மு.க.வினரால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நிகழ்த்தப்பட்டு வருகின்றன. தி.மு.க.வின் இந்த செயல்களுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டு இருக்கின்றது. மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.

கழகத்தின் வெற்றிக்காக பாடுபட்ட கழக உடன் பிறப்புகளையும், அரசுக்கு எதிராக வாக்களித்த மக்களையும் பழிவாங்குவதற்காக தான் வாக்குப் பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு மாத கால இடைவெளி விடப்பட்டதோ என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. எனவே, இந்தியத் தேர்தல் ஆணையம் இதில் உடனடியாக தலையிட்டு, தமிழகத்தில் ஆங்காங்கே நிலவும் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், இது போன்ற வன்முறைச் செயல்கள் இனி நிகழா வண்ணம் கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்.

கொடூரத் தாக்குதல்களில் பலத்த காயம் அடைந்து மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் அன்புச் சகோதரர்கள் ராமு, முனுசாமி, கங்காதரன், குப்பன், மதன், சந்திரசேகர் ஆகியோர் பூரண குணம் அடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *