நோட்டுக்காக ஓட்டுகளை விற்காதீர்கள்’ : காலை தொட்டு வணங்கி பிரசாரம்

posted in: அரசியல் | 0

கடப்பா : “நோட்டுக்காக ஓட்டுகளை விற்காதீர்கள். மது, பணம் வினியோகிப்பவர்களை நம்பாதீர்கள்.


இந்திய ஜனநாயகத்தின் பெருமையை காப்பாற்றுங்கள்’ என, சென்னையைச்சேர்ந்த ராமகிருஷ்ண சாஸ்திரி, கடப்பா மக்களின் காலில் விழுந்து, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.

கடப்பாவில் லோக்சபா இடைத்தேர்தல் நடக்க உள்ளது. கடப்பாவிலும், புலிவெந்துலா சட்டசபை தொகுதியிலும், நாளை மறுதினம் (8ம் தேதி) ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது. கடப்பா தொகுதியில் காங்கிரஸ், தெலுங்குதேசம், ஒ.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆகிய மூன்று அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. இத்தொகுதியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியதிலிருந்து வாக்காளர்களுக்கு பணம், மது தாராளமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

“ஜனநாயக முறைப்படி நாம் சுதந்திரமாக ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டும். நம் ஓட்டை நாமே அளிக்க வேண்டும்’ என, கடந்த மாதம் தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது வாக்காளர்களை கால்களை பிடித்தபடி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார் ராமகிருஷ்ண சாஸ்திரி. அதுபோல், கடந்த இரு தினங்களாக கடப்பாவிலும் வீதி, வீதியாகச் சென்று வாக்காளர்களின் காலைத் தொட்டும், இளம் வயது வாக்காளர்களின் கண்ணத்தில் கைவைத்தபடி வேண்டுகோள் விடுத்தும், தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

ராமகிருஷ்ண சாஸ்திரியின் இந்த புதுமையான பிரசாரத்திற்கு கடப்பாவின் வாக்காளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் கடப்பா டவுன் மையப்பகுதியினா ஏழுரோடு கூட்டு சாலையில், அவரது விழிப்புணர்வு பிரசாரத்தை ஆச்சரியத்துடன் கண்ட நூற்றுக்கணக்கான மக்கள், அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

பின், ராமகிருஷ்ண சாஸ்திரி, தன் விழிப்புணர்வு பிரசாரம் பற்றி நிருபர்களிடம் கூறியதாவது: வாக்காளர்களின் உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை லட்சியமாக கொண்டு பிரசாரம் செய்து வருகிறோம். இது என் ஒருவரின் எண்ணம் மட்டுமல்ல. நாடுமுழுவதிலும் இந்த பிரசாரத்திற்கு ஆயிரக்கணக்கானவர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். மேற்கு வங்கத்திலும் இதே போன்று பிரசாரம் செய்தேன். வரும் 2015ம் ஆண்டிற்குள், நாட்டில் ஜனநாயகத்தை நல்லமுறையில் நடத்திச் செல்ல அயராது உழைப்பதை நோக்கமாக கொண்டுள்ளோம். இதுவரை 49 லட்சம் வாக்காளர்களின் காலைத் தொட்டு வணங்கி இந்த விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளேன். இவ்வாறு ராமகிருஷ்ண சாஸ்திரி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *