கனிமொழியை ஜாமீனில் எடுக்க மு.க.அழகிரி டெல்லி விரைகிறார்

posted in: அரசியல் | 0

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு திமுக தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து இன்று டெல்லி செல்கிறார் அழகிரி.

கனிமொழி கைதால் திமுகவும், கருணாநிதி குடும்பமும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. நேற்று மாலை முதல் சிறையில் அடைபட்டுள்ளார் கனிமொழி. அவரைப் பார்க்க ராசாத்தி அம்மாள் டெல்லி போயுள்ளார். கருணாநிதியும் இன்று போவார் என்று கூறப்பட்டது. இருப்பினும் இப்போது நான் போகவில்லை என்று நேற்றே கருணாநிதி கூறி விட்டார்.

இந்த நிலையில், கருணாநிதிக்குப் பதில் கனிமொழியின் சகோதரரான மு.க.அழகிரி டெல்லி செல்லவுள்ளார்.

நேற்று அழகிரியைத் தொடர்பு கொண்டு பேசிய கருணாநிதி, அவரை சென்னைக்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து சென்னை வந்துள்ள அழகிரி கருணாநிதியுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து கனிமொழியை வெளியில் எடுக்கத் தேவையான சட்ட நடவடிக்கைகளை அவர் டெல்லியிலிருந்து முடுக்கி விடவுள்ளார்.

நாளை அவர் டெல்லி செல்கிறார். ராம்ஜேத்மலானி உள்ளிட்ட சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி கனிமொழியை ஜாமீனில் எடுப்பதற்கான முயற்சிகளை அவர் மேற்கொள்வார் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *