சென்னை:”சமச்சீர் கல்வி தொடர வேண்டும்’ என, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:முந்தைய அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல. சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் சில குறைகள் இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. அக்குறைகளை, படிப்படியாக சரிசெய்வது தான் முறை. சமச்சீர் கல்வி முறையையே நிறுத்தி வைப்பது, வளரும் கன்றை முளையிலேயே வெட்டுவதற்கு சமம்.சமச்சீர் கல்வி குறித்து பரிந்துரைக்க, புதிய வல்லுனர் குழு அமைக்கப்படும் என்பது காலம் தாழ்த்தும் செயல். இதன்மூலம், தனியார் பள்ளி முதலாளிகளின் நிர்பந்தத்திற்கு அரசு துணை போய்விடக் கூடாது.
அரசின் முடிவால், 200 கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்ட 9 கோடி புத்தகங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.பழைய பாடத் திட்டத்தின்படி, புத்தகங்கள் அச்சடிக்க கால தாமதமும், கூடுதல் செலவும் ஏற்படும். ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்துள்ள நிலையில், சமச்சீர் கல்வி முறையைக் கைவிடுவது, மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.மாணவர்களின் நலன் கருதி, பாகுபாடு இல்லாத கல்வியை அளிக்க சமச்சீர் கல்வி முறையை இந்த கல்வி ஆண்டு முதலே நடைமுறைபடுத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.
Leave a Reply