சிங்கூரில் கார் தயாரிப்பு தொழிற்சாலையை நிர்மானிக்க டாடாவுக்கு மக்கள் திடீர் அழைப்பு

சிங்கூர்: மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் நானோ கார் தயாரிப்பு ஆலையை அமைக்க முடியாமல் பெரும் போராட்டத்தை நடத்தி அங்கிருந்து டாடா நிறுவனத்தை துரத்திய சிங்கூர் மக்கள் தற்போது திடீரென டாடா நிறுவனத்திற்கு ஆதரவாக திரும்பியுள்ளனர்.

திட்டமிட்டபடி உங்களது ஆலையை இங்கு அமையுங்கள்.நாங்கள் முழு ஆதரவு தருகிறோம் என்று அவர்கள் ரத்தன் டாடாவுக்கு அழைப்பு விடுத்துள்லனர்.

இதையடுத்து சிங்கூர் மக்கள் பிரதிநிதிகளை கொல்கத்தாவில் வைத்து சந்திக்க முடிவு செய்துள்ளார் ரத்தன் டாடா.

கடந்த 2009ம் ஆண்டு சிங்கூரில் நானோ கார் ஆலையை நிர்மானிக்க டாடா திட்டமிட்டிருந்தது. ஆனால் மமதா பானர்ஜி தலைமையில் நடந்த மிகப் பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து தனது திட்டத்தைக் கைவிட்டார் ரத்தன் டாடா.

இந்த நிலையில் தற்போது ஆலை அமைக்க வருமாறு ரத்தனுக்கு சிங்கூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவன துணைத் தலைவர் ஏ.எஸ்.பூரி கூறுகையில், கொல்கத்தாவுக்கு வரும்போது உங்களைச் சந்திப்பேன் என்று சிங்கூர் மக்கள் பிரதிநிதிகளிடம் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *